கோளறு பதிகம் | Kolaru Pathigam |

கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது

2.458.233 Lượt nghe
கோளறு பதிகம் | Kolaru Pathigam | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |திருஞானசம்பந்தர் அருளியது
பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் திருமுறைகளாக உள்ளன. இவற்றுள் இரண்டாம் திருமுறையில் உள்ள பதிகங்களில் ஒன்று கோளறு பதிகம் என்று அழைக்கப்படுகிறது. முதல் பாடல்: வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. பொருள்: இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது. இரண்டாவது பாடல்: என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க எருதேறி ஏழை உடனே பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்கள் அவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. பொருள்: அனைத்து நட்சத்திரங்களும், நாள்களும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் புரியாது. மாறாக நன்மையே விளைவிக்கும். மூன்றாம் பாடல்: உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. பொருள்: திருமகள், துர்க்கை, அஷ்ட திக்குப் பாலகர்கள், பூமியை இயக்கும் அதி தேவதை ஆகியோர் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். குற்றமற்ற செல்வமும் வந்து எய்தும். நான்காம் பாடல்: மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர் கொடு நோய்களான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே பொருள்: சினம் மிகுந்த கூற்றுவன், அக்கினி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். கொடிய நோய்கள் வருத்தாது. ஐந்தாம் பாடல்: நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும் விடையேறு நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூதம் அவையும் அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே பொருள்: கொடிய சினத்தை உடைய அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். இல்லாமையாகிய வறுமை வந்து எய்தாது. ஆறாம் பாடல்: வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர் மடவாள் தனோடு உடனாய் நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால் கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடு நாகமோடு கரடி ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே பொருள்: சிங்கம், புலி, கொல்லும் தன்மை கொண்ட யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியவைகளால் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். ஏழாம் பாடல்: செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவார் ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே பொருள்: வெப்பம், குளிர், வாதம்; பித்தம் முதலான நாடிகள் ஆகிவைகளும் தம் இயல்பில் இருந்து நீங்காமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே விளைவிக்கும். எட்டாம் பாடல்: வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய் வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும் இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே பொருள்: கயிலை மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனை பெரும் இடர் எய்தியது. அது போன்று இடர்கள் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நேராது. ஆழ்கடலும் நன்மையே செய்யும். ஒன்பதாம் பாடல்: பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன் சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் மலர்மிசையோன் மால் மறையோடு தேவர் வரு காலமான பலவும் அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே பொருள்: நான்முகன், ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, மறைகள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். மேலும் வரும் காலங்கள் ஆன பலவும், கடலும், மேரு மலையும் நன்மையே விளைவிக்கும். பத்தாம் பாடல்: கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன் மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே பொருள்: புத்தரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான பெற்றியை உடையது சிவபெருமானின் திருநீறு. இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் நேராத வண்ணம் காத்து நிற்கும் பெருமானின் திருநீறு. பதினோறாம் பாடல்: தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!! பொருள்: இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். இது நம் ஆணை. பயன்கள்: நவகிரஹங்களால் உண்டாகும் துன்பங்களை நீக்கவும், ஆயுள் பலம் பெறவும் பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம். கிரக தோஷம், கிரக நிலையால் நாள் சரியில்லை என தோன்றும் போது இந்த பாடல்களை பாடினால் கிரக தோஷத்திலிருந்து விடுபட முடியும் என்பதே அதன் பொருள்.